செயற்கைகோள் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தச்சரின் 14 வயது மகள்
சக்திசாட் திட்டம் செயற்கைகோள் திட்டத்திற்கு, தச்சரின் 14 வயது மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சக்திசாட் திட்டம்
சக்திசாட் திட்டம்(mission shakthisat) என்பது பெண்களால் முன்னெடுக்கப்படும் உலகின் முதல் நிலவு கியூப்சாட் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்திற்கு, 108 நாடுகளைச் சேர்ந்த மாணவிகளிடமிருந்து கிட்டத்தட்ட 12,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் வடிவமைக்கும் கியூப்சாட் அக்டோபர் 11 ஆம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது.
தச்சரின் 14 வயது மகள் தேர்வு
இதில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் 20 பேரில், ஆந்திராவை சேர்ந்த தச்சரின் மகளான ஜெஸ்ஸியும் தேர்வாகியுள்ளார்.

14 வயதான கண்டூலா ஜெஸ்ஸி(Kandula Jessie), ஆந்திரப் பிரதேசத்தின் தவலேஸ்வரத்தில் உள்ள மாவட்டப் பஞ்சாயத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் (ZPGHS) 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெஸ்ஸியின் இயற்பியல் ஆசிரியை மற்றும் அடல் டிங்கரிங் ஆய்வகப் பொறுப்பாளரான மணிமாலா, அறிவியல் மற்றும் புத்தாக்கத்தில் ஜெஸ்ஸிக்கு இருந்த ஆர்வத்தைக் கவனித்து, கடந்த ஆண்டு அவரை இந்தத் திட்டத்தில் சேர்த்தார்.
மிஷன் சக்திசாட் திட்டத்தில், செயற்கைக்கோள் அமைப்புகள், உந்துவிசை, வெப்ப இயக்கவியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 550 அமர்வுகள் மற்றும் 21 தொகுதிகள் உள்ளன.
ஜெஸ்ஸி 10 ஆம் வகுப்பு படித்து வந்த போதிலும், பள்ளி முடிந்த பின்னர் தினமும் இதற்கான இணைய வழி வகுப்புகளில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 50-60% பகுதியை நிறைவு செய்தார்.
இது குறித்து பேசிய ஜெஸ்ஸியின் தாய் அருணா, “என் கணவர் ஒரு தச்சர், நாங்கள் பல போராட்டங்களைச் சந்தித்துள்ளோம். என் மகள் சர்வதேச விஞ்ஞானிகளுடன் நம்பிக்கையுடன் உரையாடுவதைப் பார்த்தது எங்கள் வாழ்க்கையின் மிகவும் பெருமைக்குரிய தருணங்களில் ஒன்றாகும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஜெஸ்ஸி, "என்னைப் போன்ற ஒரு அரசுப் பள்ளி மாணவி தேர்ந்தெடுக்கப்படுவாள் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கடின உழைப்பின் மூலம் இஸ்ரோவில் சேரும் எனது கனவை அடைய முடியும் என்று நான் உணர்கிறேன். மேலும், நான் என் பெற்றோருக்கு ஆதரவளித்து, என் ஆசிரியர்களையும் பள்ளியையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்.” என கூறியுள்ளார்.
ஜெஸ்ஸியின் இந்த சாதனைக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Heartiest congratulations to Kandula Jessie, the young daughter of a carpenter from Andhra Pradesh, on becoming the only student from our State selected among India's Top 20 for Mission ShakthiSAT, the world's first global all-girls lunar CubeSat mission.
— Deputy CMO, Andhra Pradesh (@APDeputyCMO) July 23, 2026
Your remarkable journey… pic.twitter.com/qeuJ3aGxJC
இந்த திட்டத்தின் அடுத்த கட்டம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி டெல்லியில் தொடங்கும். இதில் செய்முறைப் பயிற்சி மற்றும் தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும். பிரதமர் மோடியும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |