என் தலையை நானே துண்டித்துக்கொள்வேன்! இளம்பெண் முன் ஆடையில்லாமல் வீடியோவில் பேசிய விவகாரத்தில் எம்.பி பேட்டி
இளம்பெண்ணொருவருக்கு ஆடையில்லாமல் வீடியோ கால் செய்த விவகாரத்தில், உண்மை நிரூபிக்கப்பட்டால் நானே என் தலையை துண்டித்துக் கொள்வேன் என ஆந்திர எம்.பி கோரண்ட்லா மாதவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ருத்ரவரத்தைச் சேர்ந்த கோரண்ட்லா மாதவ் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்.பி ஆக இருக்கிறார்.
இவர் கடந்த வாரம் இளம்பெண் ஒருவருக்கு வீடியோ காலில் பேசும்போது ஆடையில்லாமல் தோன்றினார். மேலும் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் அவருக்கு எழுந்தது. இதன் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கோரண்ட்லா மாதவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும், கட்சிக்கும் தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தவே வீடியோ மார்பிங் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'எனது நற்பெயரைக் கெடுக்கவும், என்னை சிக்கலில் மாட்டிவிடவும் இந்த அவதூறு பரப்பப்படுகிறது. இந்த சதியின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னை நேரடியாக சந்திக்க வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
இது தொடர்பாக எஸ்பி மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடமும் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். இந்த சதியை போலீசார் விசாரித்து அதன் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும். வீடியோ உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், நானே என் தலையை துண்டித்துக்கொள்வேன்' என தெரிவித்துள்ளார்.