இளவரசர் ஆண்ட்ரூ கைது: மகள்களுடைய நிலை என்ன?
பிரித்தானிய மன்னர் சார்லசின் தம்பியும் பதவி இழந்த இளவரசருமான ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக, அவரது மகள்களுடைய நிலை என்ன என்னும் கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே சிக்கலில்...
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் கைது பிரித்தானியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரூ, சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும் தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் குறித்த மக்கள் பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை பார்க்கச் சென்றபோது, அவர் சிறுமி ஒருத்தியை சீரழித்த வழக்குக்காக சிறை சென்று திரும்பியிருந்தார்.
அத்துடன், அவர் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். ஆக, தாங்கள் எப்படிப்பட்ட ஒரு நபரை பார்க்கச் செல்கிறோம் என்பதும், அது முறையற்றது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் கூறியிருந்தார் ராஜகுடும்ப நிபுணரான ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் என்பவர்.
இளவரசிகள் நிலை என்ன?
இதற்கு முன், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெற்றோரான ஆண்ட்ரூவும் சாராவும் மோசமான பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால் ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்றும், அதனால், பாவம் அவர்களுடைய அப்பாவி மகள்களின் பெயர்களும் கெடுகின்றன என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன.
ஆனால், இப்போது இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால், அவர்களுக்கும் சிக்கல்தான் என்று கூறியிருந்தார் ரிச்சர்ட்.

இந்நிலையில், தற்போது இளவரசிகளின் தந்தையான ஆண்ட்ரூ கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதால், இனி, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் நிலைமை மோசம்தான் என்கிறார் ரிச்சர்ட்.
மேலும், இளவரசிகள் இருவரும் ராஜ வாழ்விலிருந்தே காணாமல் போய்விடுவார்கள் என தான் நம்புவதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் தொடர்பு வைத்துள்ள தொண்டு நிறுவனங்களுடனான உறவையும் அவர்கள் இழக்க நேரிடலாம் என்றும், அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாய்ப்பில்லை என்றும், அவர்கள் அமைதியாக இருப்பதே நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, இளவரசிகளின் தாயான சாரா ஃபெர்குசன், மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நெருக்கமான உறவு வைத்திருந்த விடயம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து சாரா தொடர்பு வைத்திருந்த தொண்டு நிறுவனங்கள், அவருடனான உறவைத் துண்டித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |