16 ஆண்டுகளாக ஜேர்மனியில் கோலோச்சி வந்த கட்சி... ஏஞ்சலா மெர்க்கல் வெளியிட்டுள்ள சோக செய்தி
ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விடைபெறும் நிலையில், ஜேர்மனியில் 16 ஆண்டுகளாக கோலோச்சி வந்த தனது கட்சி முதன்முறையாக தோல்வியடையும் வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏஞ்சலா மெர்க்கலின் Christian Democratic Union (CDU) கட்சி, 16 ஆண்டுகளாக ஜேர்மனியில் அதிகாரத்தில் இருந்து வருகிறது.
ஏஞ்சலாவுக்கு அடுத்து அவரது இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்பதை ஜேர்மனி மட்டுமல்ல உலகமே ஆவலாக எதிர்பார்த்துவந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்றில் திடமாக நிற்கவில்லை அல்லது மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை.
கடைசியாக Armin Laschet என்பவர் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால், அவர் செய்த சில தவறுகள் அவரது மதிப்பை அதல பாதாளத்துக்கு தள்ளிவிட்டன.
குறிப்பாக, சமீபத்தில் ஜேர்மனி பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட, வலிமையான நாடு என தங்களைக் கருதி கர்வம் கொண்டிருந்த ஜேர்மானியர்கள் தங்கள் நாடு வெள்ளத்தை எதிர்கொள்ளத் திணறியதைத் தொடர்ந்து அவர்கள் கோபம் அரசியல்வாதிகள் மீது திரும்பியது.
அப்படி மக்கள் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பெரு வெள்ள பாதிப்பு தொடர்பான ஒரு பேட்டியின்போது Laschet தன சக அரசியல்வாதிகளிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாக மக்கள் ஆத்திரமடைந்தனர். அதையே அவரது கடைசி சிரிப்பாக்க மக்களில் பெரும்பான்மையோர் முடிவு செய்துவிட்டார்கள் என்பதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆம், இதுவரை பெரும்பான்மை வகித்த மெர்க்கலின் கட்சிக்கு இப்போது சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
சரி, தவறுகளை சரி செய்யலாம் என்றால் நேரம் போதாது போலிருக்கிறது. ஆம், இம்மாதம் (செப்டம்பர்) 26ஆம் திகதி ஜேர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் ந்டைபெற உள்ளது!
ஆக, தனது கட்சி கடுமையான போராட்டத்தில் இருக்கிறது என்று கூறியுள்ள மெர்க்கல், அது தோல்வியை சந்திக்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.