ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை உளவு பார்க்க அமெரிக்காவுக்கு உதவிய டென்மார்க்: தகவல் வெளியானதால் பரபரப்பு
ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் உள்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், இணையவசதிக்காக கடலுக்கு அடியில் பல இடங்களில் கேபிள்களை பதித்து பயன்படுத்தி வருகிறது. இதன்வழியே சுவீடன், நார்வே, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில், டென்மார்க் ராணுவ உளவுப் பிரிவு உள்நாட்டு புலனாய்வில் ஈடுபட்டது. இதன் முடிவில், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் உள்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சி, டென்மார்க் கேபிள் வழியே உளவு அமைப்புடன் இணைந்து சுவீடன், நார்வே, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகளை உளவு பார்த்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் இது நடந்துள்ளது. ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தவிர, அந்நாட்டில் அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த Frank-Walter Steinmeier மறும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் உளவு பார்த்திருக்கிறது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சி.
டென்மார்க் இணையதள கேபிள்களில் இருந்து குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, சாட்கள் மற்றும் பிற செய்தி பகிர்வு சேவைகள் என எல்லாவற்றையும் இடைமறித்து விரிவான தரவுகளை அமெரிக்கா பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் முக்கிய குற்றவாளி என பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்திலேயே, எட்வர்டு ஸ்னோடென் என்ற சமூக ஆர்வலர் குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்னோடென், தேசிய பாதுகாப்பு ஏஜன்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பணியில் இருந்தவர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்பொழுது, பைடன் இதற்கு பதிலளிக்க தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஸ்னோடென் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
ஐரோப்பிய நாட்டு தலைவர்களை உளவு பார்த்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அமெரிக்காவை ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
நட்பு நாடுகளுக்கிடையே இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமல்ல என்று பிரான்ஸ்
ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் கூறியுள்ள நிலையில், அவரது கருத்துக்கு தானும்
உடன்படுபதாக ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.