பின்வாங்கினார் ஏஞ்சலா... போரிஸ் ஜான்சனுடனான பேச்சுவார்த்தைக்குப்பின் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு
பிரித்தானியர்களை அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தனிமைப்படுத்தவேண்டும் என்று குரல் கொடுத்த ஜேர்மன் சேன்ஸலர் பின்வாங்கியுள்ளார்.
பிரித்தானியா வந்த ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைக்கு முன்வரை பிரித்தானியாவுக்கு எதிராக குரல் கொடுத்த ஏஞ்சலா, பேச்சு வார்த்தைக்குப் பின் பின்வாங்கிவிட்டார். பேச்சுவார்த்தைக்குப்பின் போரிஸ் ஜான்சனுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், விரைவில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிரித்தானியர்களை தனிமைப்படுத்தல் இன்றி ஜேர்மனிக்குள் அனுமதிக்க இருப்பதாக தெரிவித்தார்.
இப்போதைக்கு ஜேர்மனிக்கு செல்லும் பிரித்தானியர்கள் அனைவரும் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது. ஆனால், விரைவில், பிரித்தானியர்கள் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லாமல் ஜேர்மனிக்கு பயணம் செல்லும் நிலை உருவாகும் என ஏஞ்சலா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜேர்மனி கால்பந்து போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றுப்போனதால், தயவு செய்து கால்பந்து குறித்து மட்டும் ஏஞ்சலாவுடன் பேசாதீர்கள் என பிரித்தானிய பத்திரிகைகள் கிண்டலாக செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், இங்கிலாந்து அணியை பாராட்டிய ஏஞ்சலா, அதற்கு வாழ்த்தும் தெரிவித்தார். இங்கிலாந்து அந்த வெற்றிக்கு தகுதியானதுதான் என்று கூறிய ஏஞ்சலா, ஆனாலும், ஜேர்மனி 2-0 என்ற கணக்கில் தோற்றுப்போனது தனக்கு வருத்தம்தான் என்றார்.
அதற்கு நடுவிலும், கால்பந்து போட்டிகள் நடக்கும் மைதானங்களில் அதிக அளவில் பார்வையாளர்கள் கூடுவது குறித்து ஏஞ்சலா கவலை தெரிவிக்க, மிகவும் கனவமாகவும், கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் போட்டிகள் நடப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
மேலும், வட அயர்லாந்துக்கு இறைச்சி அனுப்புவது தொடர்பான பிரெக்சிட்டுக்குப் பிந்தைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆண்டு இறுதி வாக்கில் தனது சேன்ஸலர் பதவியிலிருந்து ஏஞ்சலா விலக உள்ள நிலையில், இதுதான் அவரது இறுதி அதிகாரப்பூர்வ பிரித்தானிய பயணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.