அகதிகளுக்கு தன் நாட்டைத் திறந்துவிட்ட ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்: உலகுக்கு கற்றுக்கொடுத்த பாடம்
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசுகள் நிலைகுலைந்ததால் ஏராளமான மக்கள் அகதிகளாக தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறியபோது, 2015ஆம் ஆண்டு ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் அவர்களுக்கு தன் நாட்டின் எல்லைகளை மூட மறுப்புத் தெரிவித்தார்.
அகதிகளை ஏற்றுக்கொள்ள ஐரோப்பா மறுக்குமானால், பிறகு அது நாம் ஆசைப்பட்ட ஐரோப்பாவாக இருக்காது என்றார் அவர்.
அந்த ஆண்டில் இறுதிவாக்கில் ஒரு மில்லியன் அகதிகள் வந்திருந்தார்கள். பலர் இது பேரழிவை ஏற்படுத்தும் என கணித்தார்கள். ’அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மனிதாபிமானத்திற்குரிய செயல்தான். ஆனால், ஒரு மில்லியன் அந்நியர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது ஜேர்மன் கலாச்சாரத்துக்கே ஆபத்தாகலாம் என ஏஞ்சலா மெர்க்கலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவ்வப்போது அகதிகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு, எதிர்க்கட்சியினர் ஏஞ்சலாவை கடுமையாக விமர்சித்த தருணங்களும் உண்டு. ஆனாலும், ஆறு வருடங்களுக்குப் பிறகும், மற்றவர்கள் கணித்த பேரழிவு எதுவும் உண்மையாகவில்லை.
சமீபத்திய ஜேர்மன் தேர்தலில் அகதிகள் ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்படவில்லை. முதலில் அகதிகளைக் காரணம் காட்டி வென்ற AfD கட்சி, இப்போது வலுவிழந்துபோனது. புலம்பெயர்தலால் இஸ்லாமிய தீவிரவாதம் பெரிய அளவில் தலைதூக்கவில்லை, புலம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையினர், ஜேர்மன் பணி மற்றும் சமுதாயத்துடன் வெற்றிகரமாக ஒருங்கிணைந்துவிட்டார்கள் என்கிறார் நிபுணர் ஒருவர்.
மற்ற நாடுகள் அகதிகள் தங்கள் நாடுகளுக்குல் நுழைவதைத் தடுக்க எல்லைகளில் முள்வேலி அமைத்தபோது, இருகரம் நீட்டி அவர்களை வரவேற்றார் மெர்க்கல்.
காலம் கடந்து சென்றபோது, தான் சரியானதைத்தான் செய்தேன் என்பதை ஜேர்மனிக்கு மட்டுமல்ல, உலகுக்கே காட்டிவிட்டார் மெர்க்கல்.