பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், பிரித்தானிய அரசியலில் காட்சிகள் மாறிவருகின்றன.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்
பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 1,500 இருக்கைகளை லேபர் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இதற்கிடையில், பிரதமர் பதவியைப் பெற பிரித்தானியாவின் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் சூழ்ச்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஸ்ட்ரீட்டிங்கின் நண்பர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், ஸ்ட்ரீட்டிங் தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், முறைப்படி பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க இருப்பதாகவும் பின்னர் தகவல் வெளியானது.
பிரதமருக்கான போட்டியில் இருப்பவர் என கருதப்படும் முன்னாள் துணைப் பிரதமரான ஏஞ்சலா ரெய்னர் மீது வழக்கு ஒன்று உள்ளதால் அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கமாட்டார் என கூறப்பட்டது. அந்த நிலையும் தற்போது மாறியுள்ளது.
அதாவது, துணைப் பிரதமர் பதவிக்கு வந்ததும் அதிரடியாக பல்வேறு விடயங்களைச் செய்ததால் கவனம் ஈர்த்த ஏஞ்சலா, அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறீயதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.

விடயம் என்னவென்றால், இங்கிலாந்தில் இரண்டாவது வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு உப கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், ஏஞ்சலா வீடு வாங்கியபோது அவர் அதுதான் தனது முதல் வீடு என்று கூறியிருந்தார்.
ஆனால், ஏற்கனவே அவரது மகன் பெயரில் ஒரு வீடு உள்ள நிலையில், அவர் கூடுதலாக சுமார் 40,000 பவுண்டுகள் உபகட்டணம் செலுத்தியிருக்கவேண்டும்.
ஆனால், அவர் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுவந்தன. அதைத் தொடர்ந்து, தனது துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஏஞ்சலா.
ஆகவே, அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கமாட்டார் என தகவல் வெளியானது.
ஆனால், அந்த நிலை தற்போது மாறிவிட்டது. ஆம், வரி தொடர்பான வழக்கிலிருந்து ஏஞ்சலா தற்போது விடுவிக்கப்பட்டுவிட்டார்.
ஏஞ்சலா, தான் செலுத்தவேண்டிய உபகட்டணமான 40,000 பவுண்டுகளை செலுத்திவிட்டதால், அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க ஏஞ்சலாவுக்கு இருந்த தடை விலகிவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |