ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்? முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் போரிஸ் ஜோன்சன்
இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க முடியுமா என்பது தொடர்பில் போரிஸ் ஜோன்சன் திங்களன்று அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வர்ரும் ஜூலை 19 பிரித்தானியா இயல்பு நிலைக்கு திரும்பும் என்று பெருவாரியான மக்களால் எதிர்பார்க்கப்படும் அதிகாரப்பூர்வ திகதியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் முன்னதாக அவ்வாறு செய்வது பாதுகாப்பானதா என்பதை மதிப்பிடுவதற்கு இந்த வாரம் உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் குறித்த தரவுகளை பிரதமர் ஆய்வு செய்வார்.
தொடர்ந்து திங்கட்கிழமை முக்கிய முடிவெடுப்பதற்கான கூட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் அந்த முடிவை பிரதமர் ஜோன்சன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என பிரதமருக்கான செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூலை 19 தொடர்பில் அளித்த வாக்குறுதி குறித்து ஜோன்சன் மிக கவனமாக உள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஜூலை 5ம் திகதி இரவு அனைத்து கட்டுப்படுகளையும் நீக்கும் சூழலில் நாடு தற்போது இல்லை என மூத்த அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பெருவாரியான மக்களிடம் தடுப்பூசி திட்டத்தினை கொண்டு சேர்த்ததே தற்போது கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு காரணமாக அமைந்தது என சில நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.