உருமாறும் தொற்று... வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம்: முக்கிய நிபுணர் கருத்து
பல நாடுகளில் கொரோனா தொற்று உருமாற்றம் கண்டு வருவதால், வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம் என்று பைசர் நிறுவன தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமலும், தடுப்பூசி விநியோகத்தை சீர்படுத்த முடியாமலும் திணறி வருகின்றனர்.
பிரித்தானியாவில் பிரேசில், மற்றும் தென்னாபிரிக்கா உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றால் பல பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றை கண்டறிந்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே பைசர் நிறுவன தலைவர் Albert Bourla, கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் குறித்து தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மட்டுமின்றி, நாளுக்கு நாள் பல நாடுகளில் கொரோனா தொற்று உருமாற்றம் கண்டு வருவதால், இதை கட்டுப்படுத்துவது உண்மையில் சாத்தியமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இதனால் வருடாந்தர கொரோனா தடுப்பூசி அவசியமாக வரலாம் என Albert Bourla தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட மக்கள் அடுத்த 6 மாதம் அல்லது, ஒரு வருடத்திற்குள் மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார் Albert Bourla.
இருப்பினும், தற்போதைய சூழல் தொடர்பான கணிப்பு மட்டுமே இதுவெனவும், இறுதியான முடிவு அல்ல இதுவெனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பைசர் நிறுவனத்தின் தலைவர் Albert Bourla தெரிவித்துள்ள இதே கருத்தையே, பல நிபுணர்களும் விஞ்ஞானிகளும் சமீப நாட்களில் தெரிவித்து வருகின்றனர்.