கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தலாம்: J & J தடுப்பூசியால் மேலும் ஒரு பிரச்சினை
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் கொரோனாவுக்கெதிராக போராடும் வகையில் நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கி வருவது மக்களுக்குத் தொண்டாற்றுவதாக இருந்தாலும், மறுபக்கம் ஒவ்வொரு நிறுவனமுமே தங்கள் லாபத்தையும் கருத்தில் கொண்டுதான் செயல்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக மருந்து தயாரிப்பாளர்களும், அழகுப்பொருட்கள் தயாரிப்பாளர்களும் உலகையே பின்னணியில் இருந்து ஆள்வதாக கூறப்படுவதும் உண்டு.
சமீபத்தில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் நீரிழிவு சிகிச்சைக்கான மருந்து தொடர்பில் ஒரு சர்ச்சை எழுந்தது. அந்த மருந்தை உட்கொள்ளுவோருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பயங்கர பக்க விளைவுகள் இருப்பதை மறைந்து, அந்நிறுவனம் அந்த மருந்தை விற்று பல மில்லியன் டொலர்கள் வருமானம் பார்த்துவிட்டது.
பிறகு, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் விசாரணையில் இறங்கி, அந்த மருந்து போத்தலின் மீது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த எச்சரிக்கையை அச்சிடவேண்டுமென உத்தரவிட, அதன்படி நிறுவனம் செய்ய, அதைத் தொடர்ந்து அந்த மருந்து விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனலாம்.
அதாவது, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி, அரியவகை இரத்தக்கசிவு பிரச்சினை ஒன்றை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
ஆகவே, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பு மருந்தை மீளாய்வு செய்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம், அந்நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், இந்த அபூர்வ இரத்தக்கசிவு பிரச்சினை குறித்து, தடுப்பூசியுடன் வழங்கப்படும் கையேட்டில் ( fact sheet) குறிப்பிடப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, உடலில் இரத்தத்தட்டுகள் (platelets) என்னும் செல்கள் குறைவாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் உடையவர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு இரத்தக்கசிவு பிரச்சினை ஏற்படலாம் என்னும் தகவல் அந்த fact sheetஇல் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
இந்த platelets என்பவை, காயம் ஏற்படும்போது, இரத்தம் உறைவதற்கு உதவும் முக்கியமான செல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, immune thrombocytopenia (ITP) பிரச்சினை உடையவர்கள், தடுப்பூசி பெறும் முன் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளவேண்டும் என அறிக்கை ஒன்றில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி, thrombosis with thrombocytopenia syndrome (TTS) என்னும் இரத்தக்கட்டிகள் உருவாக்கும் பிரச்சினையுடன் தொடர்பு இருப்பதாக பிரச்சினை எழுந்தது.
குறிப்பாக, 30 முதல் 49 வயதுவரையிலான பெண்களுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு இரத்தக்கட்டிகள் உருவாகுவதாக தகவல் வெளியாகி, அமெரிக்கர்கள் அந்நிறுவன தடுப்பூசியை தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்குமளவிற்கு பிரச்சினை எழுந்தது. அதற்கு பதிலாக, பைசர் அல்லது மொடெர்னா நிறுவனத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் பொருத்தவரை, இதுவரை சுமார் 17 மில்லியன் அமெரிக்கர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.