மாஸ்க் இல்லாமல் ரயில் பயணம்: வெளிநாட்டில் சிக்கிய பிரித்தானியர்
சிங்கப்பூரில் பணியாற்றிவரும் பிரித்தானியர் ஒருவர், மாஸ்க் அணியாமல் ரயில் பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது சிறை தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்.
மாஸ்க் அணிந்து கொள்வதால் கொரோனா பரவலை தடுக்க முடியாது என்ற கொள்கை கொண்டவர் 39 வயதான Benjamin Glynn. இதனால் இவர் மாஸ்க் அணிந்து கொள்வதும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மே 7ம் திகதி வேலை முடித்து ரயிலில் குடியிருப்புக்கு திரும்பியவர் வழக்கம் போல மாஸ்க் அணியவில்லை என்றே கூறப்படுகிறது.
இதை, இவருக்கு தெரியாமல் ரயில் பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி சுமார் 28 மணி நேரம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் மீது தற்போது பொதுவெளியில் தொல்லை ஏற்படுத்திய குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் வரையில் சிறை தண்டனை உறுதி என கூறப்படுகிறது.
தற்போது அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதிய வேலை ஒன்று உறுதியான நிலையில், குடும்பத்துடன் நாடு திரும்ப இன்னும் ஒருவாரமே எஞ்சிய நிலையில் மாஸ்க் அணியாமல் ரயிலில் சிக்கியுள்ளார்.