பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15000 வழங்க திட்டம்- அரசின் உத்தரவு
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
ரூ.15000 வழங்கும் திட்டம்
ஆந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார்.
கடந்த வருடம் ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு திட்டங்களை சந்திரபாபு நாயுடு அறிவித்து வருகிறார்.
தேர்தலின் போது சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் வாக்குறுதிகளை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
சந்திரபாபு நாயுடு அரசு அமைத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், "தல்லிகி வந்தனம்" என்ற பெயரில் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளர்.
இந்த திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வருடத்திற்கு 15 ஆயிரம் அளிக்கப்படும் என அரசு உத்தரவு அளித்துள்ளது.
ஆந்திரா அரசின் உத்தரவு
தல்லிகி வந்தனம் திட்டத்தின் படி, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டுக்காக அந்த தொகையில் ரூ.2 ஆயிரம் கழித்துக் கொள்ளப்படும். மீதம் உள்ள தொகை, அந்த குழந்தையின் தாய் அல்லது பாதுகாவலரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு செல்பவர்களாக இருந்தாலும் தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் இந்த தொகை அளிக்கப்படும்.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறாத பள்ளிகள், ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பலனடைய தகுதி உடையவர்கள்.
67 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களும், 43 லட்சத்துக்கு மேற்பட்ட அம்மாக்களும் தல்லிகி வந்தனம் திட்டத்தால் பலன் அடைவார்கள்.
வரும் 12ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து, நிதியுதவி விடுவிக்கப்படும்.
மக்கள் தொகையை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அதிக குழந்தைகளை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள அரசு ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகவும் இது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |