இலங்கை தமிழரின் இசை முயற்சி - வீடியோ காலில் அழைத்து பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்
ar rahman appreciate Kirijan Uthayakumar by video call for his water bottled music: இலங்கை தமிழரான கிரிஜன் உதயகுமார் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் இசையமைத்து வருவது ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவரை வீடியோ காலில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இலங்கை தமிழரின் இசை முயற்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையின் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதான கிரிஜன் உதயகுமார்(Kirijan Uthayakumar), முறையாக இசைக் கல்வி பயிலாத போதிலும், தன்னுடைய ஆர்வத்தால் வீட்டில் உள்ள பொருட்களை இசைக்கருவிகளாக மாற்றி இசையையமைத்து வருகிறார்.

தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் இசையமைத்து அதனை தனது Riomusiq என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன.
அவர் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை கண்ணாடி பாட்டில்களில் இசைப்பதோடு, ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுப்பார்.

கிரிஜன் உதயகுமாரின் வீடியோக்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவரை வீடியோ காலில் அழைத்த ஏ.ஆர்.ரஹ்மான் உங்களது வீடியோக்களை பார்த்துள்ளேன். பார்த்துகிட்டுதான் இருக்கிறேன் என பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை அழைத்து பாராட்டிய நிலையில், இதற்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில், ஒரு நிமிடத்திற்குள்ளாக 4 கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு பாடலுக்கான இசையை அமைத்து kalam world records ன் அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
மேலும், Influencer Book Of World Records, Lionzie world records ஆகியவை இவரை அங்கீகரித்துள்ளன.

இலங்கை தமிழரான கிரிஜன் உதயகுமார் மேலும் இது போன்ற சாதனைகளை படைத்து, இசைத்துறையில் அங்கீகாரம் பெறுவார் என அவரது வீடியோக்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |