பிரசவித்த கர்ப்பிணியைக் கொன்றுவிட்டு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்த நபர்: ஒரு பயங்கர வரலாறு
அர்ஜென்டினா நாட்டில், உணவகம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவரைத் தேடி, இளம்பெண் ஒருவர் வந்தார். அவர்களுடைய சந்திப்பு இரத்தக்கரை படிந்த ஒரு வரலாற்றை வெளிக்கொணர்ந்தது.
என் தம்பியைத் தேடுகிறேன்
Guillermo Pérez Roisinblit என்னும் அந்த 21 வயது இளைஞர் உணவகத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, ரு இளம்பெண் அவரைத் தேடி வர, நான் பிஸியாக இருக்கிறேன் என்று பதில் கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தார் Guillermo.
ஒரு நாற்காலியில் உட்கார்ந்த அந்த இளம்பெண், என் பெயர் Eva Mariana Pérez, நான் காணாமல் போன என் தம்பியைத் தேடிக்கொண்டிருக்கிறேன், அது நீங்களாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன் என்று ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்திருக்கிறார்.
உடனே, வேலையை விட்டுவிட்டு வந்த Guillermo, தான் அவருடைய தம்பியாக இருக்க வாய்ப்பில்லை என்றும், தனது குடும்பப் பெயர் Gómez என்றும், Pérez அல்ல என்றும் கூற, Eva ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டியுள்ளார். அந்த புகைப்படம் அப்படியே Guillermoவைப் போலிருக்க, குழப்பமடைந்த அவரிடம் அந்தப் பெண் கூறிய கதை அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அதிரவைத்த பின்னணி
அந்த புகைப்படத்தில் இருந்தவர், Evaவின் தந்தை, அதாவது, Eva மற்றும் Guillermoவின் தந்தை!
உண்மை என்னவென்றால், Eva, 15 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரது தாயாகிய Patricia, Guillermoவை கருவில் சுமந்துகொண்டிருந்திருக்கிறார்.
அது, 1978ஆம் ஆண்டு... அந்த காலகட்டத்தில் அர்ஜென்டினாவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகார ஆட்சி நடத்தியுள்ளது. ஆட்கடத்தல்களும் கொலைகளும் சர்வசாதாரணமாக நடைபெற்ற காலகட்டம் அது.
அப்படி கடத்தப்படும் பெண்கள் கர்ப்பிணிகளாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை காத்திருந்து, குழந்தை பிறந்ததும், தாயைக் கொன்றுவிட்டு, பிள்ளையை, பிள்ளையில்லாத ராணுவ வீரர்கள் தத்தெடுத்துக்கொள்ளும் ஒரு பைத்தியக்காரத்தனம் நிகழ்ந்த காலகட்டம் அது. சுமார் 30,000 பேர் அப்படி கொல்லப்பட்டுள்ளார்கள்.
அப்படி, Guillermoவின் பெற்றோராகிய Patricia Roisinblitம் José Manuel Pérez Rojoவும் கடத்தப்பட்டுள்ளார்கள். எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த Patriciaவுக்கு குழந்தை பிறந்ததும், அவர் கொல்லப்பட்டுவிட, ஒரு ராணுவ வீரர் Guillermoவை தத்தெடுத்து வளர்த்துள்ளார். இந்த உண்மைகள் அவரது பாட்டியான Rosa Roisinblit மற்றும் அக்காவாகிய Eva மூலம் தெரியவந்தன.
ஜேர்மனியில் சிக்கிய நபர்
இப்படி அர்ஜென்டினாவில் கொடூரக்கொலைகள் புரிந்த கடற்படை தளபதி ஒருவர், ஜேர்மனிக்கு தப்பிவந்துள்ளார். அவர் பெயர் Luis Esteban Kyburg (75). 150 பேருடைய உயிர் பலிகளுக்கு காரணமாக இருந்த இந்த Luis, 2013ஆம் ஆண்டு ஜேர்மனிக்குத் தப்பி வந்து, ஜேர்மன் குடியுரிமையும் பெற்று பெர்லினில் சொகுசாக வாழ்ந்துவந்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், Luisஇன் கடந்த காலம் குறித்த பயங்கர உண்மைகளை ஜேர்மன் பத்திரிகையான BILD கண்டுபிடிக்க, அவர் மீதான வழக்குத் துவங்கியுள்ளது.
அர்ஜென்டினா அதிகாரிகள் துணையுடன், சாட்சியங்களைத் திரட்டி, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு, முறைப்படி ஆவணங்களைத் தயார் செய்து, வாரண்டுடன் அவரைக் கைது செய்ய அவரது வீட்டுக்கு ஜேர்மன் அதிகாரிகள் சென்றுள்ளார்கள்.
ஏராளமானோருக்கு காத்திருந்த ஏமாற்றம்
இத்தனை பேரைக் கொன்று பிள்ளைகளைப் பிரித்துவிட்டு, நிம்மதியாக வாழ்ந்துவந்த குற்றவாளி சிக்கினார் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அதிகாரிகளும் பெரும் மகிழ்ச்சியில் இருக்க, Luisஇன் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளுக்கு ஒரு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
ஆம், Luis கடந்த மாதமே, அதாவது, அக்டோபர் மாதமே, மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி மட்டுமே அதிகாரிகளுக்குக் கிடைத்தது.
தங்களுக்கு நியாயம் கிடக்காமலே போய்விட்டதாகக் கூறி தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |