லண்டனை உலுக்கிய இளம் ஆசிரியை கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: வெளிவரும் தகவல்
பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன் உட்பட பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்த இளம் ஆசிரியை படுகொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் படுகொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை சபீனா நெஸ்ஸா வழக்கில், சந்தேக நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையனது குறித்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவதாக ஸ்கொட்லாந்து யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி ஞாயிறன்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இளம் ஆசிரியை சபீனா நெஸ்ஸா கொல்லப்பட்டு, அவரது சடலம் தென் லண்டன் பூங்கா ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்னர் கிழக்கு சசெக்ஸில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 38 வயதான அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவல் சபீனா நெஸ்ஸா குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் வாக்களித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், சபீனா நெஸ்ஸாவை கொலை செய்த நபர் தானா கைதானவர் என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
முன்னதாக, கொல்லப்பட்ட ஆசிரியை சபீனா நெஸ்ஸா தொடர்பில் உருக்கமான இரங்கல் செய்தியை தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்.
மட்டுமின்றி பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஆசிரியை சபீனாவின் உறவினர்களுக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் ஓராண்டில் மட்டும் பிரித்தானியா முழுவதும் 180 பெண்கள் ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.