உலகமே தாலிபான்களால் பரபரப்படைந்துள்ள நிலையிலும் தீவிரவாதிகளுக்கு உதவிய பெண் ஜேர்மனியில் கைது
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளதால் தீவிரவாதிகள் குறித்தே உலகம் பேசிக்கொண்டிருக்கும் நிலையிலும், தீவிரவாத அமைப்பான ஐ எஸ் அமைப்புக்கு உதவியதாக ஜேர்மனியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Denise S. என்ற அந்த பெண், ஐ எஸ் அமைப்புக்காக பணம் சேகரித்ததாகவும், மத்திய கிழக்கு நாடுகளுடன் அந்த அமைப்பினர் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு உதவிவருவதாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.
அத்துடன், அவர்களுக்கு அனுப்புவதற்காக பணம் சேகரிக்கப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பதற்காக ஐ எஸ் அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுடன் தொடர்பிலிருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஐ எஸ் அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவர் குர்திஷ் அகதிகள் முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில்,, அவர் மீண்டும் ஐ எஸ் அமைப்புக்கு திரும்ப உதவும் வகையில், அவருக்காக Denise நிதி திரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Denise என்ற அந்த பெண், Munichக்கு அருகிலுள்ள Geretsried என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்றிற்கு ஆதரவளித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம்.
இதேபோல் ஜேர்மனியிலுள்ள ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்காக நிதி திரட்டி அனுப்பிய Aymen A.-J. என்ற ஈராக்கியர் ஒருவருக்கும் Denise ஆதரவளித்ததாகவும் கருதப்படுகிறது.