இந்தாண்டு பிரித்தானியாவில் மேலும் 60,000 பேர்கள்... பகீர் கிளப்பும் நிபுணர்கள்
பிரித்தானியாவில் ஆண்டு தோறும் ஏற்படும் கொடிய காய்ச்சலுக்கு இந்த முறை மிகப்பெரிய இழப்பை நாடு எதிர்கொள்ளும் என நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் NHS மிகுந்த கவனத்துடன், களத்தில் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக குளிர் காலத்தில் பிரித்தானியாவில் அதிக மரணங்கள் ஏற்படும், அதற்காகவே ஆண்டு தோறும் தடுப்பூசியும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த முறை கொரோனா தொற்றுடன் வருடாந்தர குளிர்கால காய்ச்சலும் சேர்ந்து கொள்வதால், 60,000 பிரித்தானியர்கள் வரை இறக்க நேரலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மூன்று தொற்றுகளின் பாதிப்பு பிரித்தானிய மக்களை இந்தமுறை வாட்டிவதைக்க இருப்பதாக எச்சரிக்கும் ஆய்வாளர்கள், இது NHS மட்டத்தில் கடும் அழுத்தங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
குளிர்கால காய்ச்சலுக்கு இலக்காகும் மக்கள் கண்டிப்பாக குடியிருப்புகளில் முடங்க வேண்டும் எனவும், இன்னொரு பேராபத்தை தவிர்க்க உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால் NHS ஊழியர்கள் அதிக அழுத்தமின்றி பணியாற்ற உதவும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வராத இந்த காலகட்டத்தில் குளிர்கால காய்ச்சலின் விளைவுகள் தொடர்பில் இன்னும் அதிக அளவு நிச்சயமற்ற தன்மை உள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், பொதுவாக குளிர்கால காய்ச்சலால் ஏற்படும் மரணங்கள், மருத்துவமனையை நாடுதல் உள்ளிட்டவை கண்டிப்பாக இந்த முறை இருமடங்காக இருக்கலாம் என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நுணுக்கமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்தமுறை 15,000 முதல் 60,000 வரையில் இறப்பு ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
ஆனால் தற்போதைய சூழலில் NHS ஊழியர்களால் குளிர்கால காய்ச்சல் நோயாளிகளை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனைய நோய்களுக்கான சிகிச்சைக்காக 5 மில்லியன் மக்கள் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.