வங்க கடலில் உருவான 'அசானி' புயல்! பெயர் வைத்துள்ள இலங்கை... தாக்கம் எப்படி இருக்கும்?
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயலுக்கு அசானி புயல் என இலங்கை பெயர் சூட்டியுள்ளது.
அதன்படி காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக வலுபெற்றுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் மே10-ம் திகதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒடிசா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக இரு மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.
அதே நேரம் அசானி புயலால் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் இருக்காது. ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அசானி என்ற பெயரை சூட்டியிருப்பது இலங்கை. அந்நாட்டின் சிங்கள மொழியில் அசானி என்றால் 'கடும் சீற்றம்' என்று பொருள். புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள் என்ற பின்ணணி சுவாரஸ்யமானது. உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இயற்கை சீற்றங்களின் தகவல்களை பெறுவதில் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒவ்வோர் புயலுக்கும் பெயரிடப்படும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
உலகம் முழுவதும், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் - ஆலோசனைகளை வழங்குவதற்கும், பெயரிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.