கொரோனாவால் என் குடும்பத்தினருக்கு என்ன நடந்தது? முதன் முறையாக மனம் திறந்த அஸ்வின்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான, அஸ்வின் கொரோனாவால் தன் குடும்பத்தினர் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், டெல்லி அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், அதன் பின் திடீரென்று அந்த தொடரில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்தே, அஸ்வின் குடும்பத்தினருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதன் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து அஸ்வின் கூறுகையில், நான் டெல்லி அணியில் விளையாடி கொண்டிருந்த போது எனது குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல் மற்றும் மூன்று நான்கு நாட்கள் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. என் மனைவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சில பல மருந்துகளைக் கொடுத்தும் அவர்களது காய்ச்சல் குறையவில்லை.
அதன் பிறகு என்னுடைய குடும்பத்தினருக்கும் இந்த உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனது தந்தை முதல் ஐந்து நாட்கள் நன்றாகத்தான் இருந்தார். அதன் பின்னர் அவரின் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கியது.
மீண்டும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கவே இல்லை. அதன் பிறகு அவருக்கு இரு முறை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி அதன் பிறகே தற்போது அவர் நலமுடன் உள்ளார். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் எனது தந்தையை காப்பாற்ற முடிந்தது.
எனவே அனைவரும் அறிகுறி இல்லை என்றாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.