கொலை வழக்கில் 8 மாத குட்டியுடன் தாய் யானை கைது!
சிறுவனைக் கொன்றதாக தாய் யானையும், குட்டி யானையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கோலாகட் மாவட்டத்தில், கடந்த வாரம் 14 வயது சிறுவன் ஒருவன் வளர்ப்பு யானை ஒன்றால் தாக்கி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து மகனை இழந்த சிறுவனின் பெற்றோர்கள் போகாகத் (Bokakhat) காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட பொலிஸார், சிறுவனைத் தாக்கிக் கொன்றதாக கூறப்படும் Dulumoni எனும் தாய் யானை மற்றும் அதன் 8 மாத குட்டி யானையையும் அதன் உரிமையாளருடன் காவல் நிலையதிற்கு அழைத்து வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பின்னர் தாய் யானையும் குட்டி யானையும் வனத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டன.
Assam: A female elephant and her calf were taken to Bokakhat police station for the alleged killing of a boy in Golaghat district
— ANI (@ANI) July 15, 2021
"During the investigation, the elephant & her calf were brought to the police station & later handed over to forest officials," say police pic.twitter.com/joTbAeoK8w
விசாரணையில் இந்த யானைகள் போகாகத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜித்தேன் கோகாய் (Jiten Gogoi) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
மேலும், ஜூலை 8-ஆம் திகதி பிஜூலி பகுதியில் தேயிலைத் தோட்டம் அருகே நடந்த இந்த சம்பவத்தில், சிறுவன் குட்டி யானையை கட்டி பிடிக்க முயன்றபோது தாய் யானை தாக்கியதாக கூறப்படுகிறது.