இரத்தக்கட்டிகளைத் தொடர்ந்து ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மீண்டும் ஒரு புதிய பிரச்சினை
ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தில் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு மூளையில் இரத்தக்கட்டிகள் உருவாகிய விடயத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.
இந்நிலையில், ஆஸ்ட்ராசெனகா நிறுவன தடுப்பூசியால் மீண்டும் ஒரு புதிய பிரச்சினை உருவாகுவது தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராசெனகா நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுமார் 350 பேருக்கு இரத்தக்கட்டிகள் உருவானதோடு, இரத்தத்தில் இரத்தத்தட்டுகளின் அளவு அசாதாரன அளவுக்கு குறைவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால். 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தவிர்த்து வேறு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறத்தொடங்கினர். இந்நிலையில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மற்றொரு இரத்தக்கசிவு தொடர்பான பிரச்சினை உருவாகுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒரு இலட்சத்தில் ஒருவருக்கு idiopathic thrombocytopenic purpura (ITP) என்னும் பிரச்சினை உருவாகியுள்ளது. இந்த விடயத்தை எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த ITP என்பது, ஒருவரது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பே, அவரது இரத்தத்தட்டுக்களை சிதைத்துவிடும் ஒரு பிரச்சினையாகும். மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு இரத்தத்தட்டுகளின் பங்கு முக்கியமானது.
அவை குறைந்தால் இரத்தம் உறைதல் பாதிக்கப்படும். இந்த பிரச்சினையிலில் இரத்தம் உறைதலுக்கு காரணமான இரத்தத்தட்டுக்களே சிதைந்து போவதால், தோலுக்கு அடியில் இரத்தக்கசிவு ஏற்பட்டு அவை உடலில் பரவி, உடலில் ஆங்காங்கு ஊதா நிற புள்ளிகளை உருவாக்கும்.
எடின்பர்க் ஆய்வாளர்கள் கூறும்போது, இந்த பிரச்சினை, ஏற்கனவே உருவாகியுள்ள இரத்தக்கட்டிகள் பிரச்சினையின் மற்றொரு வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என கருதுகிறார்கள்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளும் இரத்தக்கட்டிகளை உருவாக்குவது தெரியவந்துள்ள நிலையில், பைசர் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசிகள் இதுவரை எவ்வித இரத்தக்கட்டிகளையும் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.