புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா: பிரித்தானிய பிரதமருக்கு கிடைத்துள்ள வெற்றி
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த வகை செய்யும் மசோதா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா
பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டம்.
விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் பெரும்பாலும் கொண்டு செல்லப்படுவார்களேயொழிய, அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுதான் அச்சத்தை உருவாக்கியுள்ள விடயம்.
அதாவது, இப்படி ஒரு திட்டம் இருப்பதால், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர வெளிநாட்டவர்கள் பயப்படவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
பிரித்தானிய பிரதமருக்கு கிடைத்துள்ள வெற்றி
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக சட்டம் ஒன்றைக் கொண்டுவர ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அரசு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், ருவாண்டா திட்டம் தொடர்பான மசோதா ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கீழவை முன் நேற்று முன்வைக்கப்பட்டது.
அந்த மசோதாவை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்த்துவந்தார்கள்.
ஆனால், வாக்கெடுப்பிலோ, அந்த மசோதாவுக்கு ஆதரவாக 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க, மசோதா வெற்றி பெற்றுவிட்டது.
இது பிரதமர் ரிஷிக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு மசோதா சட்டமாக்கப்படவேண்டுமானால், அது ஏழு படிகளைத் தாண்டி வரவேண்டும். ஆக, முதல் படியில்தான் ரிஷி வெற்றிபெற்றுள்ளார். அவர் மசோதாவில் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவராவிட்டால், அடுத்தடுத்த கட்டங்களில் அவரது மசோதாவை தோற்கடித்துவிடுவோம் என்று கூறியுள்ளார்கள், மசோதாவை எதிர்க்கும் அவரது கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |