பிரித்தானிய அரசை நீதிமன்றத்திற்கு இழுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்: அகதிகளை ஆப்பிரிக்கா அனுப்பும் விவகாரம்
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது.
ஆம், லொறிகளின் பின்னால் ஏறி பிரித்தானியாவுக்குள் நுழைந்த இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் ருவாண்டா விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.
எரித்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரும், ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த நிலையில், அவர்களுடைய புகலிடக் கோரிக்கைக்கு உள்துறை அலுவலகம் இதுவரை பதிலளிக்காததால், அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சார்பில் அவர்களுடைய வழக்கறிஞர்கள் பிரித்தானிய அரசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
இது தாங்கள் எதிர்பார்த்ததுதான் என்று கூறியுள்ள உள்துறை அலுவலக அலுவலர் ஒருவர், வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் பிரித்தானிய அரசின் கொள்கைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.