தந்தை போல பேசி பாலியல் தொல்லை! அம்பலமான பயிற்சியாளர் நாகராஜனின் லீலைகள்
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் குறித்து வீராங்கனைகள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தடகள பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாகராஜன் சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி, உடலுக்கு மசாஜ் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை ஒருவருக்கு நாகராஜன் கொடுத்த பாலியல் தொல்லையால், அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், மற்றொரு வீராங்கனைக்கு நரம்பு பிரச்சனை ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொல்லைக்கு உள்ளான வீராங்கனை ஒருவர் தற்போது வரை திருமண உறவில் ஈடுபட முடியாத நிலையிலும், ஆண்களை கண்டால் அஞ்சும் வகையில் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுவது கொடுமையின் உச்சம்.
16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த வீராங்கனையிடம் தந்தை போல் பேசி, பயிற்சிக்குப் பிறகு காத்திருக்கச் சொல்லி நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தன்னை அவர் கடவுள் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது பாதிக்கப்பட்ட மற்றொரு வீராங்கனையின் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இவ்வளவு புகார்களுக்கு ஆளான நாகராஜனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.