ஆக்ஸிஜன் வாங்க! இந்தியாவுக்கு பெரும் தொகையை நன்கொடையாக அளித்த பிரபல அவுஸ்திரேலிய வீரர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு 50,000 டொலர் நிதியுதவி அளித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா அணி ரூ.15 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா நான் பல ஆண்டுகளாக மிகவும் நேசிக்கும் நாடு, இங்குள்ள மக்கள் நான் சந்தித்ததில் மிகவும் அன்பான மற்றும் கனிவானவர்கள்.
இம்முறை பலர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என அறிவது என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது ஐபிஎல் தொடர்வது சரியா என விவாதம் நடந்தது.
— Pat Cummins (@patcummins30) April 26, 2021
மக்கள் ஊரடங்கில் இருக்கும்போது ஐ.பி.எல் விளையாடுவது, கடினமான நேரத்தில் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் சில மணிநேர மகிழ்ச்சியையும் ஓய்வு நேரத்தையும் அளிக்கிறது என்று இந்திய அரசு கருதுவதாக எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
நன்மைக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைய உதவும் ஒரு தளமாக இருப்பது வீரர்களாகிய எங்களின் பாக்கியம்.
அதை மனதில் கொண்டு, ‘PM Cares Fund’-க்கு எனது பங்களிப்பைச் செய்துள்ளேன், குறிப்பாக இந்திய மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் வாங்குவதற்காக, எனது சக ஐபிஎல் வீரர்களையும், இந்தியாவால் ஈர்க்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள அனைவரும் நன்கொடை அளிக்க ஊக்குவிக்கிறேன்.
நான் 50,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.37.35 லட்சம்) அளித்து இதை தொடங்குகிறேன் என பேட் கம்மின்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.