மூன்றாவது மாகாணத்தில் பறவைக் காய்ச்சல்... முட்டைகள் வாங்குவது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிக்குக் கொடிய வகையிலான பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மக்கள் பதற்றமடைந்து பொருட்களை வாங்கிக் குவிக்க தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பாதிப்புகள்
மாகாணத்தின் மத்திய-வடக்குக் கடற்கரைப் பகுதியான 'ஹாக்ஸ் நெஸ்ட்' (Hawks Nest) என்ற இடத்தில், வலசை வரும் பறவை ஒன்றிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

மேலும், வார இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் பரிசோதனைகள் மூலம் இந்த பாதிப்பு உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இருப்பினும், இந்த வைரஸ் கண்டறியப்பட்டது ஆச்சரியமளிக்கும் விடயம் அல்ல என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கடல் பறவைகளிடம் இந்த வைரஸ் வகையின் ஐந்து பாதிப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு பெர்த் புறநகர்ப் பகுதியான முல்லாலூவில், வலசை வரும் பறவை ஒன்றிடம் வெள்ளிக்கிழமையன்று கண்டறியப்பட்ட மற்றொரு சந்தேகத்திற்குரிய பாதிப்பு உட்பட ஐந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பேரிடர் விளைவிக்கக்கூடிய வகையிலான பரவலைத் தடுப்பதற்காக, தொழில் துறையினருடன் இணைந்து அரசு செயல்பட்டு வருவதால், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் விலங்குகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், மனிதர்களுக்கு ஏற்படும் அபாயம், அது பரவும் விதம் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் பொதுவாகக் குறைவாகவே கருதப்படுகிறது.
மனிதர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் சாதாரண சளியைப் போலவே இருப்பதாகவும், மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவியதாக இதுவரை எந்த நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெளிநாடுகளில் இந்நோய் தீவிரமாகப் பரவியுள்ள பகுதிகளில், வனவிலங்குகள் மற்றும் விவசாய உயிரினங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன.
மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான பறவை இனங்களும், 50-க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்றே தெரிய வருகிறது. சிட்னிக்கு வடக்கே சுமார் 228 கி.மீ. தொலைவில் உள்ள ஹாக்ஸ் நெஸ்ட் நகருக்கு அருகே, ஒரு ராட்சதப் பாவை எதிர்பாராத விதமாகக் காணப்பட்டதாகப் பொதுமக்களில் ஒருவர் தெரிவித்ததை அடுத்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், H5N1 இன்ஃப்ளூயன்ஸா தொற்று இருப்பது முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்த நிலையில், கோழித் தொழிலில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை, ஆனால் புதிய தொற்று பாதிப்பு குறித்து உற்பத்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என நியூ சவுத் வேல்ஸ் வேளாண்மை அமைச்சர் தாரா மோரியார்டி தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்துறை மீது எந்தவொரு கட்டாய அமலாக்க நடவடிக்கைகளும் விதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரசாங்கம் கோழி வளர்ப்புத் தொழிலுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது, என்ன சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள் எனவும் அமைச்சர் மோரியார்டி தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பீதியுடன் முட்டைகளை வாங்க வேண்டிய அவசியமில்லை - தொடர்ந்து முட்டைகளை வாங்குங்கள், தொடர்ந்து கோழிக்கறியை வாங்குங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, காட்டுப் பறவைகளுக்கு காய்ச்சல் இருப்பதாகச் சந்தேகப்படும் பட்சத்தில் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்விலங்குகளை நீங்களே தொட வேண்டாம் என்றும் நினைவூட்டப்படுகிறார்கள்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பறவைகளை அழித்து, பாலூட்டிகளின் இறப்புக்கும் காரணமான, மிக வேகமாகப் பரவக்கூடிய அந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகாத ஒரே கண்டமாக ஜூன் மாதம் வரை அவுஸ்திரேலியா இருந்துள்ளது. ஆனால் தற்போது மூன்று மாகாணங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |