அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் தமிழர்! இரு கைகளிலும் பந்து வீசும் அபாரம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் தமிழர் ஒருவர் பங்கேற்று விளையாடியுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கயானாவில் தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனை 45 ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில்அவுஸ்திரேலியாவின் பிளேயிங் 11-ல் விளையாடிய நிவேதன் ராதாகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவருடைய அப்பா அன்புச் செல்வன் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால், நிவேதன் ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பாக பயிற்சியைக் கொடுத்துள்ளார்.
இதனால், வலது மற்றும் இடது என இரு கைகளிலும் பந்து வீசக்கூடிய நிவேதன், பேட்டிங்கிலும் அசத்துகிறார். இவரின் திறமையை அறிந்த அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், டெல்லி அணிக்காக வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நிவேதன் ராதாகிருஷணனை பயன்படுத்திக் கொண்டார்.
இப்போது, அவுஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் அணியிலேயே இடம்பிடிதுள்ள அவர், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 10 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை எடுத்த அவர், பேட்டிங்கிலும் 31 ரன்கள் எடுத்து முத்திரை பதித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு நிவேதன் ராதாகிருஷ்ணனின் ஆட்டம் பெரும்பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.