உச்சம் தொட்ட புலம்பெயர் மக்கள் எண்ணிக்கை... மாணவர்கள் Visa விதிகளை கடுமையாக்கிய நாடு
அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை மீண்டும் உச்சம் தொட்ட நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான Visa விதிகளை கடுமையாக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது.
ஆங்கில மொழித் திறன் சோதனை
தொடர்புடைய நடவடிக்கை இந்த வாரத்தில் இருந்தே அமுலுக்கு வருகிறது. சனிக்கிழமை முதல், மாணவர் மற்றும் பட்டதாரி விசாக்களுக்கான ஆங்கில மொழித் திறன் சோதனை அதிகரிக்கப்பட உள்ளது.
மேலும் சர்வதேச மாணவர்கள் சேர்க்கையை முன்னெடுக்கும் நிறுவனங்கள் இந்த விதிகளை மீறினால், நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. இது போன்ற நடவடிக்கைகளால் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை சரிவடையும் என நம்புவதாக அரசாங்கம் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் நோக்கத்துடன், மாணவர் விசாவில் வருகை தருவோரை கட்டுப்படுத்த, உண்மையான மாணவரா என்பதையும் சோதிக்க முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடற்ற வேலை நேரம் உள்ளிட்டவையும் கண்காணிக்க உள்ளனர். கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட 2022ல் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை அவுஸ்திரேலியா அரசு அதிகரித்தது.
கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த அந்த காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 2 ஆண்டுகள் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாமல் போனது.
புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை
ஆனால் தற்போது வெளிநாட்டு மாணவர்கல் மற்றும் தொழிலாளர்களின் திடீர் அதிகரிப்பானது ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் வாடகை குடியிருப்புகளுக்கான விவகாரத்தில் தேவையற்ற அழுத்தமேற்படும் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில், புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்து 548,800 என எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக அவுஸ்திரேலியாவின் மக்கள்தொகையும் சுமார் 2.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு படையெடுக்கின்றனர்.