அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி
பெங்களூருவிலுள்ள பகல் நேரக் குழந்தைகள் காப்பகம் ஒன்றின் ஊழியர்கள், அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அடைப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
வாஷிங் மெஷினுக்குள் அடைக்கப்படும் குழந்தைகள்
பெங்களூருவில், வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் செல்லும் பகல் நேரக் காப்பகங்களில் ஒன்று, Capgemini பகல் நேரக் குழந்தைகள் காப்பகம்.

இந்நிலையில், குழந்தைகள் உதவி எண்ணுக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதில், Capgemini காப்பகத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதற்கு ஆதாரமாக வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் அந்த காப்பகத்துக்கு விரைந்துள்ளார்கள்.
அந்த காப்பகத்தில் பணி செய்துவரும் மஞ்சுளா, விஜயலக்ஷ்மி, பவானி, சிந்து மற்றும் பிந்து என்னும் ஐந்து பெண்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்
இந்நிலையில், இந்த துன்புறுத்தல் நீண்ட காலமாக நடந்துவருவது தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து அந்த காப்பகத்தில் வேலை பார்த்த பெண்ணொருவர் தன் மேலதிகாரிக்கு புகாரளிக்க, புகார் கொடுத்த பெண்ணை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்கள்.
தற்போது, மற்றொரு பெண் ஆதாரத்துடன் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்தே பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அதிரவைத்துள்ள தகவல்கள்
பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக பெற்றோர் அந்த காப்பகத்தை நம்பி அங்கு பிள்ளைகளை விட்டுச் செல்லும் நிலையில், அந்த காப்பகத்தில் பணி செய்யும் சில பெண்கள், அழும் குழந்தைகளின் அழுகையை அடக்குவதற்காக, குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டு மூடியுள்ளார்கள்.

சில குழந்தைகள் குளியலறைக்குள் அடைக்கப்படும் காட்சிகளும், டாய்லெட்டில் பயன்படுத்துவதற்கு பயன்படும் கை ஷவரைக் கொண்டு பிள்ளைகள் வாய்க்குள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் காட்சிகளும் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பொலிஸ் விசரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ள Capgemini நிறுவனம், தனது பெங்களூரு கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |