பிறந்த குழந்தையின் முகத்தில் 13 தையல்கள்: நெஞ்சைப் பிளக்கும் பின்னணி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பிஞ்சு குழந்தை ஒன்று முகத்தில் கோடு கிழித்தது போன்று பெரிய காயத்துடன் பிறந்த சம்பவம் மொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விசாரித்ததில், அறுவை சிகிச்சைமூலம் குழந்தை பிறந்ததால், மருத்துவர்களின் கவனக்குறைவால், பிஞ்சு குழந்தையின் முகத்தில் கத்தி கிழித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.
இதனால், குழந்தை பிறந்த உடனையே மருத்துவர்கள் அந்த பிஞ்சு குழந்தை முகத்தில் 13 தையல் போட்டுள்ளனர். கொலராடோவில் உள்ள டென்வர் சுகாதார மையத்திலேயே புதன்கிழமை இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் அதிர்ச்சியாக இருப்பதாகவும், கண்டிப்பாக இந்த காயம் தொடர்பில் குழந்தை கேள்வி கேட்கும், அப்போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என தந்தை Damarqus Williams கவலையுடன் தெரிவித்துள்ளார்.
சுக பிரசவம் வேண்டும் என்றே குழந்தையின் தாயார் Reazjhana Williams ஆசைப்பட்டுள்ளார். ஆனால் டென்வர் சுகாதார மைய மருத்துவர்கள் உடனடியாக பிரசவத்தை முன்னெடுக்கும் பொருட்டு மாத்திரைகளை அளித்து, அடுத்த சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக அறுவை சிகிச்சைக்கும் முடிவெடுத்துள்ளனர்.
மட்டுமின்றி, குழந்தையின் இதயத்துடிப்பு சில நொடிகள் கேட்காமல் போகவே, அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது என மருத்துவர்கள் சாதாரணமாக கூறியுள்ளனர்.
முகத்தில் வெட்டு காயத்துடன் குழந்தை பிறந்துள்ளதால், மொத்த மகிழ்ச்சியும் கரைந்தது போன்றும், தற்போது கவலையும் அதிர்ச்சியும் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
தற்போது குழந்தையின் முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்திற்கான சிகிச்சை தொடர்பில், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றனர்.