தாயாரின் சடலத்துடன் ஐந்து நாட்கள் சிக்கித்தவித்த பச்சிளம் குழந்தை: துயர சம்பவத்தின் பின்னணி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வீடற்றவர்களுக்கான இல்லத்தில் மரணமடைந்த தாயாரின் சடலத்துடன் பச்சிளம் குழந்தை ஐந்து நாட்கள் போராடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த இளம் தாயார் தவறுதலாக அதிக மருந்து உட்கொண்டதால் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அந்த இல்லம் மற்றும் நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு எதிராக 5 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்க இருப்பதாக குழந்தையின் தந்தை அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 25ம் திகதி மிகவும் பரிதாபமான நிலையில், பிறந்து 15 மாதமேயான குழந்தை, அவரது தாயாரின் சடலத்தின் அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உடல் முழுவதும் மனித கழிவுகளுடன், நீர்ச்சத்து குறைந்து, மிகவும் மோசமான நிலையில் இருந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால், வீடற்றவர்களுக்கான நகர நிர்வாகம் மொத்த குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன், மரணமடைந்த 26 வயது Shelbi Westlake வின் சடலம் எத்தனை நாள் க்ண்டுகொள்ளாமல் விடப்பட்டது என்பதை உறுதி செய்ய மறுத்துள்ளனர்.
குறித்த தாயார் தமது கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் சுமார் 4 மாதங்கள் தமது பிள்ளையுடன் அந்த இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். அயலத்தார் கெட்ட வாடை வீசுவதாக புகார் அளித்த பின்னரே, Shelbi Westlake தங்கியிருந்த குடியிருப்புக்கு நிர்வாகிகள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. குழந்தை இன்னமும் முழுமையாக மீளவில்லை எனவும், சிகிச்சையில் தொடர்வதாகவும் தந்தை Quraan Laboy தெரிவித்துள்ளார்.