114 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்! சிக்ஸர்மழையில் வங்காளதேச அணி அபார வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுருண்ட பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது.

தொடக்க வீரர் சாஹிப்ஸதா ஃபர்ஹான் 38 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில், நாஹித் ராணாவின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் தள்ளாடியபோது, ஃபஹீம் அஷ்ரஃப் ஓட்டங்களை சேர்த்து அணியை மீட்கப் போராடினார்.
அவரது பொறுப்பான ஆட்டத்தினால் பாகிஸ்தான் 100 ஓட்டங்களை கடந்தாலும், 30.4 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
வங்காளதேச அணி அதிரடி வெற்றி
ஃபஹீம் அஷ்ரஃப் (Faheem Ashraf) 47 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்தார். நாஹித் ராணா (Nahid Rana) 24 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது. அந்த அணியின் தன்ஸித் ஹசன் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவர் அதிரடியாக அரைசதம் விளாச, வங்காளதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 15.1 ஓவர்களில் 115 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |