ஜோடியாக 345 ஓட்டங்கள் குவித்து வங்க தேசத்தை கதறவிட்ட திமுத்-தனஞ்சய டி சில்வா! இலங்கை அபாரம்
வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கேப்டன் திமுத் கருணாத்த-தனஞ்சய டி சில்வா ஜோடி 345 ஓட்டங்கள் குவித்து பட்டையை கிளப்பியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி Pallekele மைதானத்தில் ஏப்ரல் 21ம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பபெடுத்தாடிய வங்க தேச அணி 3வது நாள் வரை அபராமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 541 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதனையடுத்து, 3வது நாள் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட தொடங்கியது.
துவக்க துடுப்பாட்டகாரர்களாக திமுத் கருணாரத்த, லஹிரு திரிமான்ன ஆகியோர் களமிறங்கினர்.
லஹிரு திரிமான்ன (58), ஓசத பெர்னாண்டோ (20), ஏஞ்சலோ மேத்யூஸ் (25) ஓட்டங்களில் அவுட்டாகினர்.
3வது நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் எடுத்திருந்தது. திமுத் 85 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
எனினும், 4வது ஆட்டத்தை தொடர்ந்த திமுத்-தனஞ்சய டி சில்வா ஜோடி நாள் முழுவதும் துடுப்பாடி வங்க தேச அணியை கதறவிட்டது.
திமுத் இரட்டை சதம் அடித்து பட்டை கிளப்ப மறுபுறம் தனஞ்சய டி சில்வா 150-ஐ கடந்தார்.
4வது நாள் முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 512 ஓட்டங்கள் குவித்தது. திமுத் 234 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் தனஞ்சய டி சில்வா 166 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து திமுத் 244 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திமுத்-தனஞ்சய டி சில்வா 345 ஓட்டங்கள் குவித்து பட்டையை கிளப்பியுள்ளனர்.
தற்போது 160வது ஓவர் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 553 ஓட்டங்கள் எடுத்துள்ளது. நிரோஷன் திக்வெல்ல, வனிந்து ஹசரங்க ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
வங்க தேச தரப்பில் பந்து வீச்சில் டாஸ்கின் அகமது அதிகபட்சமாக திமுத்-தனஞ்சய உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.