ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளால் ஜேர்மனியில் இந்த பிரச்சினை உருவாகலாம்: அரசு எச்சரிக்கை
ஜேர்மனியில் இரண்டு நாட்களாக கேபினட் கூட்டம் நடந்துவந்த நிலையில், உக்ரைன் போர் குறித்தும், அதனால் ஜேர்மனியின் பொருளாதாரம் மீது ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதால், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தின் மீது விதிக்கும் தடைகளால், பொருட்கள் விநியோகத்தில் பிரச்சினைகள் உருவாகலாம் என்றும், பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஜேர்மன் அரசு எச்சரித்துள்ளது.
ஜேர்மனியில் அமைந்துள்ள அரசில் இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகள், தாங்கள் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தின் மீது விதிக்கும் தடைகளை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில், அதனால் பிரச்சினைகள் உருவாகலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளன.
பொருளாதாரத்துறை அமைச்சரும் துணை சேன்ஸலருமான Robert Habeck கூறும்போது, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் பொருட்கள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்றார்.
அத்துடன், விலைவாசியும் உயரலாம் என்றும் கூறியுள்ள அவர், ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தடை விதிப்பது அவசியமாகும் என்று கூறியுள்ளார்.