ஐபிஎல்லில் விளையாடும் தமிழக வீரருக்கு கொரோனா தொற்று! எஞ்சிய போட்டிகளை நடத்துவது தொடர்பாக வெளியான முக்கிய தகவல்
எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்துவது பற்றி பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் திகதி தொடங்கி மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக இந்த முறையில் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி திடீரென ரத்தானது.
ஏனெனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று உறுதியானதை அடுத்தே ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆட்டம் மற்றொரு திகதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிக்கான மாற்று திகதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
நல்லவேளையாக அணி வீரர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பை சந்தித்து இருக்கும் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அத்துடன் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட இருக்கிறது.
இப்படி கொரோனா பெரும் பீதியை கிளப்பி வருவதால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்துவது பற்றி பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் 3 மைதானங்கள் இருப்பதால் அங்கு போட்டிகளை நடத்துவது பற்றி பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசிப்பதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.