தடுப்பூசி முக்கியம்... மரணப்படுக்கையில் கெஞ்சிய பிரித்தானியர்
தடுப்பூசி தொடர்பில் தயக்கம் கொண்டிருந்த பிரித்தானியர் ஒருவர், கொரோனா பாதிப்பால் மரணப்படுக்கையில் இருந்த நிலையில், பொதுமக்களிடம் கெஞ்சிய சம்பவம் வெளியாகியுள்ளது.
பிளாக்பர்ன் பகுதியை சேர்ந்த 46 வயதான Brian Lynch தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டி வந்துள்ளதுடன், தாமதமாக போட்டுக்கொள்ளலாம் எனவும் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட Brian Lynch ஜூலை 7ம் திகதி ராயல் பிளாக்பர்ன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றின் தாக்கம் அவரை கடுமையாக உலுக்கிய நிலையில், குணமடைந்து வீடு திரும்பியதும், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்வேன் எனவும் குடும்பத்தாரிடம் உறுதி அளித்துள்ளார்.
மட்டுமின்றி, தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுபவர்கள், அதை விடுத்து கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், எனது நிலை உங்களுக்கு வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், மருத்துவ ரீதியான கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், கொரோனா பாதிப்பில் இருந்து மீளாமல் ஜூலை 31ம் திகதி மரணமடைந்துள்ளார். ஜூலை 7ம் திகதி சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Brian Lynch, வயதானவர்களை மட்டுமே கொரோனா தாக்கும் என எண்ணி இருந்தேன்.
ஆனால் இப்போது மூச்சு விடவும் அவதிப்படுகிறேன், இது போன்ற ஒரு சூழலை வாழ்நாளில் அனுபவித்ததில்லை என குறிப்பிட்டுள்ள Brian Lynch, மரண பயம் என்ன என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஜூலை 12ம் திகதி சமூக ஊடகத்தில் பதிவிட்ட அவர், கொரோனாவால் ஏற்படும் இந்த இருமல் உண்மையில் மிகவும் கொடுமையானது.
தூங்க முடியாமல் அவதிப்படுகிறேன், மூச்சு விட முடியவில்லை, உடலின் மொத்த வலிமையும் இழந்ததாகவே உணர்கிறேன் என அவர் தெரிவித்திருந்தார்.