வனப்பகுதியில் சிறுவனின் சடலம்: ஆசை வார்த்தை கூறி தீர்த்துக்கட்டிய நண்பன்
இங்கிலாந்தின் பாஸ்டன் நகரில் 12 வயது பள்ளி மாணவனை ஏமாற்றி, வனப்பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.
லிங்கன்ஷயர், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 வயதேயான ராபர்ட்ஸ் பன்சிஸ் என்ற பள்ளி மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவனின் கழுத்து, மார்பு, வயிறு, தலை என ஆழமான கத்திக்குத்து காயங்கள் மரண காரணம் என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 14 வயது சிறுவன் கொலை வழக்கை எதிர்கொள்கிறான். சிறுவன் ராபர்ட்ஸ் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு, உடலை அங்கேயே விட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
கொலை வழக்கில் கைதாகியுள்ள சிறுவனும் ராபர்ட்சும் நண்பர்கள் எனவும், நள்ளிரவில் ஆசை வார்த்தை கூறி குடியிருப்பில் இருந்து ராபர்ட்ஸை வெளியே அழைத்து சென்றதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும் கொலை செய்த சிறுவன், தமது நண்பனுக்கு அனுப்பிய குறுந்தகவலும் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராபர்ட்ஸ் கொலை வழக்கில் சிக்கிய சிறுவன் போதை மருந்து விற்பனை கும்பலில் தொடர்புடையவன் எனவும், இதில் போதை மருந்து விற்பனைக்காக அந்த சிறுவன் ராபர்ட்ஸை ஊக்குவித்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
மேலும், களவு செய்ததாக ராபர்ட்ஸ் நீதான சந்தேகத்திலேயே அந்த சிறுவனை கொலைக்கு தூண்டியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று சுமார் 3.26 மணிக்கு இருவரும் கிரீன் கிராமத்தில், மரங்கள் அடர்ந்த பகுதியில் சந்தித்துள்ளனர்.
ஆயுதத்துடன் சந்திப்புக்கு வந்த அந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக ராப்ர்ட்ஸை கத்தியால் தாக்கியுள்ளான். இதில் குற்றுயிரான ராபர்ட்ஸ் சம்பவம் நடந்த பகுதியிலேயே மரணமடைந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்னும் சில நாட்கள் தொடரும் என்றே நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.