வட அயர்லாந்தில் வெடித்த வன்முறை... பெல்ஃபாஸ்ட் குடும்பம் உருக்கமான கோரிக்கை
பெல்ஃபாஸ்டில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கானவரின் குடும்பத்தினர், நகரம் முழுவதும் கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து அமைதி காக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
எலான் மஸ்க், டாமி ராபின்சன்
தாக்குதல் சம்பவத்தில் தனது இடது கண்ணை இழந்த ஸ்டீபன் ஓகில்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தின் காட்சிகளே திங்கள்கிழமை மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை முழுவதும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

இந்த நிலையில், 30 வயதான சூடான் நாட்டைச் சேர்ந்த ஹாடி அலோடிட், ஓகில்வியைக் கொலை செய்ய முயன்றது, அதே நாளில் NHS கதிரியக்க நிபுணர் ஒருவரைக் கொலை செய்வதாக மிரட்டியது மற்றும் கத்தி வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை பெல்ஃபாஸ்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஸ்டீபன் ஓகில்வி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்த எலான் மஸ்க், டாமி ராபின்சன் மற்றும் பிற தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள், மக்களை வீதிகளில் இறங்கிப் போராடுமாறு வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு, முகமூடி அணிந்த நபர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கூட்டம் பெல்ஃபாஸ்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனங்களையும் வீடுகளையும் எரித்து, சாலைகளை மறித்து பெரும் கலவரத்திற்கு காரணமாயினர்.
நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்துள்ள ஸ்டீபன் ஓகில்வி குடும்பத்தினர் தற்போது உருக்கமான கோரிக்கை ஒன்றை அறிக்கை ஊடாக முன்வைத்துள்ளனர்.

எங்கள் அன்புக்குரியவர் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலால் நாங்கள் முற்றிலும் நிலைகுலைந்துவிட்டோம். இது எங்கள் குடும்பம் முழுவதற்கும் ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது; தற்போது அவரது படுக்கைக்கருகில் இருந்து, அவர் குணமடைய உதவுவதே எங்கள் ஒரே முன்னுரிமையாக உள்ளது.
அமைதியின்மை வரவேற்கத்தக்கதல்ல
மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நிலவும் பதட்டங்களையும், போராட்டங்கள் குறித்த பிரபலங்களின் அழைப்புகளையும் நாங்கள் அறிவோம். ஒரே இரவில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை வரவேற்கத்தக்கதல்ல என்பதையும், அமைதியான போராட்டமே முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி என்பதையும் நாங்கள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், நமது நாட்டின் சுகாதார மற்றும் விருந்தோம்பல் துறைகள் உட்பட பல்வேறு துறைகளில் மிக மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கும் பல புலம்பெயர்ந்தோர் உள்ளனர்; நாட்டின் செயல்பாட்டிற்கு நாம் அவர்களைச் சார்ந்திருக்கிறோம்.
இந்த மோசமான துயரச் சம்பவம், மக்களிடையே பிளவை ஏற்படுத்தவோ அல்லது விரோத உணர்வைத் தூண்டவோ பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, அயர்லாந்திலிருந்து வந்த பிறகு, பிரித்தானியாவில் தங்குவதற்கு அலோடிட் (Alodid) என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை அன்று வெளிச்சத்திற்கு வந்தது. புதன்கிழமை நடைபெற்ற சுருக்கமான விசாரணைக்குப் பிறகு, அவர் நான்கு வாரங்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |