நாளையே இந்தியாவிலிருந்து புறப்படும் பென் ஸ்டோக்ஸ்... 3 மாதங்களுக்கு கிரிக்கெட்டிலிருந்து விலகல்! என்ன காரணம்?
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் எதிர்வரும் 3 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகி இருப்பார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது பென் ஸ்டோக்ஸ்-க்கு விரலில் காயம் ஏற்பட்டது.
காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக இந்த வார தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி உறுதிப்படுத்தியது.
எனினும், அணி வீரர்களை உற்சாகப்படுத்த பென் ஸ்டோக்ஸ் சில நாட்கள் அணியுடன் இருப்பார் என ராஜஸ்தான் அணி அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் பென் ஸ்டோக்ஸின் இடது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானதால் அவர் 12 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து விலகுவார்.
தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ராஜஸ்தான் அணியுடன் இந்தியாவில் இருக்கும் ஸ்டோக்ஸ், நாளையே இங்கிலாந்து திரும்புவார்.
திங்கட்கிழமை லீட்ஸ் நகரில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது.