பிரித்தானியா-இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவிற்கு வந்துவிட்டது தடுப்பூசி! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியா மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி செயல்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், அங்கிருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இருப்பினும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருவதால், இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இந்த வைரஸ்களை கட்டுப்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பிரித்தானியாவில் பரவும் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக வேலை செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியா தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவாக்சின் தடுப்பூசி பிரித்தானியா கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக போதியளவு செயல்படுகிறது. இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் கோவாக்சின் தடுப்பூசி செயல்படுகிறது.
கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அளவில் கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா டுவிட் செய்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், அப்போது கோவாக்சின் 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுக்கு வரவில்லை. இதனால், கோவாக்சின் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.