நவம்பர் முதல் பிரித்தானியர்களுக்கு அனுமதி! ஜோ பைடன் முடிவுக்கு போரிஸ் ஜான்சன் பாராட்டு..
இறுதியாக முழு தடுப்பூசி போடப்பட்ட பிரித்தானியர்களை அமெரிக்காவில் அனுமதிக்க ஜோ பைடன் எடுத்த முடிவை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான பயண விதிகளை தளர்த்துமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை இப்போது வெளிநாட்டுப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கான 18 மாத தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பிரித்தானிய பயணிகள் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவிற்குள் எந்த தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த இந்த முடிவை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய போரிஸ் ஜான்சன், அமெரிக்காவுக்கான பயணத்தை மீண்டும் திறப்பது 'வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான அற்புதமான ஊக்கம்' என்று கூறினார்.
இதன் மூலம், இரு நாடுகளிலும் பிரிந்து வாழவும் குடும்பத்தினரும் நண்பர்களும் மீண்டும் ஒன்றிணைவது மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
முன்னதாக, பிரித்தானிய அரசு ஜூலை மாதம் 'நல்லெண்ண சைகை'யாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.