போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும்... பராக் ஒபாமா வெளிப்படை
2024 தேர்தலை எதிர்கொள்ள ஜோ பைடனின் திறமை குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்
ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள ஒபாமா, அவரது திறமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே வேளை இந்த வார இறுதியில் ஜோ பைடன் போட்டியில் இருந்து வெளியேறக்கூடும் என்று பல உயர்மட்ட ஜனநாயகக் கட்சி தலைவர்கள் நம்புகிறார்கள். தமது முன்னாள் துணை ஜனாதிபதி இந்த நெருக்கடியான சூழலில் வெற்றிபெறுவார் என்பது சந்தேகமே என குறிப்பிட்டுள்ள ஒபாமா,
ஒரு வேட்பாளராக தனது நம்பகத்தன்மையை ஜோ பைடன் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தமது வயது மற்றும் உடல் நிலை குறித்து புரிந்துகொண்டுள்ள ஜோ பைடன் உரிய முடிவெடுப்பார் என்றே கட்சி வட்டாரத்தில் நம்புகின்றனர்.
மட்டுமின்றி, புதன்கிழமை அவர் கோவிட் தொற்றுக்கு இலக்கானதும் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. ஆனால் தாம் நலமுடன் இருப்பதாகவே ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பைடன் வெல்ல வாய்ப்பில்லை
ஜோ பைடனுக்கு நெருக்கமான வட்டாரத்திலும், அவரது நெருங்கிய நண்பர்களும், தற்போதைய இறுக்கமான சூழலில் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஜோ பைடன் வெல்ல வாய்ப்பில்லை என்றே நம்புகின்றனர்.
ஜோ பைடன் நீடித்தால், அது ட்ரம்புக்கு சாதகமாக அமையும் என்றும், ஜனநாயகக் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியை அளிக்கும் என்றும் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் நம்புகின்றனர்.
ஜூலை 13ம் திகதி நடந்த ட்ரம்புக்கு எதிரான தாக்குதலை அடுத்து, அவரது ஆதரவு பெருகி வருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை இரவு குடியரசுக் கட்சியின் வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக ட்ரம்ப் அறிவிக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |