மீண்டும் தனிமைப்படுத்திக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அலுவல் பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா பாதிப்பு எனவும், வயதானவர்களுக்கு பொதுவாக காணக்கூடிய அறிகுறிகள் எனவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா சிகிச்சையின் ஒருபகுதியாக Paxlovid மருந்தை எடுத்துக் கொள்ளும் முதியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் மருத்துவக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
79 வயதான ஜோ பைடன் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், நண்பர்களே இன்று மீண்டும் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களுக்கு இதுபோன்று மறுபடியும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் எனவும், அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், தமது சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களின் நலன் கருதி தாம் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அலுவல்களை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும், மிக விரைவில் சந்திக்கலாம் எனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
மட்டுமின்றி, புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனையிலும், அது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே சனிக்கிழமை மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் தரப்பும், ஜனாதிபதி ஜோ பைடனும் தெரிவித்துள்ளனர்.