30 ஆண்டுகளில் முதன்முறையாக மிகப்பெரிய ரயில் வேலை நிறுத்தம்: ஸ்தம்பித்த பிரித்தானியா...
பிரித்தானியா 30 ஆண்டுகளில் முதன்முறையாக மிகப்பெரிய ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை சந்தித்துள்ளது.
ரயில்வே பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர், ஊதியம் முதலான சில பிரச்சினைகள் தொடர்பில் வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் இறங்கியுள்ளதைத் தொடர்ந்து பிரித்தானியா ஸ்தம்பித்துப்போயுள்ளது.
வேலை நிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ரயில்கள் இல்லாததால் மக்கள் கார்களில் புறப்பட, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கோவிட் பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் இப்போதுதான் மெல்ல மீண்டுவரும் நிலையில், ரயில் வேலை நிறுத்தத்தால் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளது. ஆனால், இது கோடை அதிருப்தியின் ஒரு ஆரம்பம்தான் என்கின்றன ரயில்வே யூனியன்கள்.
அதாவது, உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், ஊழியர்களைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புறவுப் பணியாளர்கள் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தோர் கூட இனி வேலை நிறுத்தங்களில் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் வரும் நாட்கள் அரசுக்கும் மக்களுக்கும் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் நாட்களாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.