கொரோனவால் 3 முறை தள்ளிப் போன திருமணம்! கடைசியாக இளைஞன் எடுத்த ரிஸ்க்: என்ன செய்தார் தெரியுமா?
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இளைஞனின் திருமணம் பல முறை தள்ளிப் போன நிலையில், அந்த இளைஞன், தற்போது செய்துள்ள செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியா அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களில், கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு மிகவும் கடுமையான ஊரடங்கு விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் படி பீகாரிலும், ஊரடங்கு விதிகள் அமுல்படுத்தப்பட்டதால், அந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞன் திருமணத்திற்காக செய்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் உச்சககானில் வசிக்கும் கவுதம் குமாருக்கும், பாங்கா மாவட்டம் பாரத்சிலா கிராமத்தில் வசிக்கும் கும்குமுமாரி என்பவருக்கும் கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் மூன்று, நான்கு முறை தள்ளிப் போடப்பட்டது. ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், கவுதம் குமார், மணமகளின் ஊரான பாரத்சிலா கிராமத்திற்கு 24 கி.மீற்றர் தூரம் சைக்கிளில் சென்று, அங்கு விருந்தினர்கள், கொண்டாட்டங்கள், திருமண ஊர்வலம் என ஏதுமின்றி எளிய முறையில் கும்குமுமாரியை திருமணம் செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஷம்புகஞ்ச் வட்டார அலுவலர் பிரபாத் ரஞ்சன், மணமக்களை நேரில் வந்து வாழ்ந்து தெரிவித்து பாராட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவின் இரண்டாவது அலையால் பீகாரில் ஊரடங்கு கடுமையாக உள்ளது. மணமகன் கவுதமின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் கவுதம் திருமணம் செய்து கொண்டார். புதிதாக திருமணமான தம்பதியினருக்கு மாவட்ட கலெக்டருடன் பேசி விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.