கனேடிய மாகாணமொன்றில் நிகழ்ந்த பயங்கர விபத்து: நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தில் இளம்பெண்ணொருவர் பலியான நிலையில், அந்த விபத்து நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
பயங்கர விபத்து
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Sea-to-Sky Highway என்னும் நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், சிலர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்கள்.

அதைக் கண்ட பொலிசார் அவர்களை பின்தொடர, பொலிசிடமிருந்து தப்புவதற்காக வேகமாகச் சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.
அப்போது கேரவன் ஒன்றின் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோத, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் அவர்.
நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
இந்த துயர விபத்து ஒரு உயிரை பலிவாங்கிவிட்டதுடன் நிற்கவில்லை. விபத்து காரணமாக Sea-to-Sky Highway நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட, மக்கள் இரவை நெடுஞ்சாலையிலேயே செலவிட நேர்ந்துள்ளது.
முதியவர்கள், குழந்தைகள், தங்கள் விமானத்தைப் பிடிப்பதற்காக புறப்பட்டவர்கள் என பலதரப்பினரும் சாலை ஓரமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், சிறுபிள்ளைகளுடன் வந்தவர்கள், இந்த திடீர் விபத்தால் பிள்ளைகளுக்கு உணவில்லாமல் தவிக்க, பொழுதைக் கழிப்பதற்காக கேம்பிங் சென்றவர்கள் சிலர் அவர்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
சிலர், சாலையோரமாக தங்கள் கூடாரங்களை விரித்து அமர்ந்துகொள்ள, சிலர் நடை பயில, இளம் ஜோடிகள் தங்கள் துணைகளை மடியில் கிடத்திக்கொள்ள, அதிகாலை 3.00 மணி வாக்கில் நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |