சாகும் நிலையில் இருக்கும் போது கிரிக்கெட்டவா பார்ப்பாங்க? IPL-ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர் வேதனை
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவுஸ்திரேலியா வீரர் ஆடம் ஜாம்ப்பா அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். இந்தியாவில் தற்போது 14-வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது.
கடந்த முறை கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர், இந்த முறை இந்தியாவில் பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
இருப்பினும், இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், வெளிநாட்டு வீரர்கள் சிலர் திடீரென்று விலகி வருகின்றனர்.
அந்த வகையில் அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவருமான ஆடம் ஜாம்பா தொடரில் இருந்து இடையில் விலகினார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்த முறை வீரர்களுக்கான பாதுகாப்பு வளையம் மிகவும் பலவீனமாக உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட நம்பிக்கை இந்த முறை ஏற்படவில்லை. இதுவே நான் பாதியில் விலகியதற்கு முக்கிய காரணம்.
நாங்கள் இப்போதெல்லாம் பயோபபுள் எனும் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கப் பழகிக் கொண்டு விட்டோம். இருப்பினும், இந்தியாவில் மிகவும் பலவீனமாக உள்ளது.
பாதுகாப்புப் போதவில்லை. இங்கு சுகாதாரம் பற்றி எப்பவுமே எச்சரிக்கப்பட்டுள்ளோம். இதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை இருப்பதால் நான் விலகினேன்.
இந்தியாவில்தான் உலகக்கோப்பை டி20 நடைபெறுகிறது, அதற்கு இன்னும் 6 மாதகாலம் இருப்பினும் பாதுகாப்பு கேள்வி இருக்கவே செய்கிறது.
ஆனால் 6-மாதம் என்பது தொலைவில் உள்ளது. நிச்சயமாக இந்தியாவில் கொரோனா சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. பயிற்சி உள்ளிட்டவையில் ஆடினேன்.
ஆனால் அணியில் ஆடவில்லை. பயிற்சிக்குப் போனேன் ஆனால் எனக்கு ஆடுவதற்கான உத்வேகமே வரவில்லை.
வீட்டுக்கு சென்றால் போதும் என்ற எண்ணமே இருந்தது. விமானச்சேவை உள்ளது என்றவுடன் வீட்டுக்கு வந்து விடவேண்டும் என்ற எண்ணமே இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட தருணத்தில் கிரிக்கெட் ஒரு பெரிய ரிலீப் என்று பலரும் கருத்துக் கூறுகின்றனர். ஆனால் இது அவரவர் சொந்தக் கருத்துதான். குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது கிரிக்கெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.