பிரித்தானியாவில் பரவும் H5N1 பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில், லங்காஷையர் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்து.
அதனைத் தொடர்ந்து, நோய்வாய்ப்பட்ட அல்லது இறக்கும் பறவைகளை எங்கும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ப்ரெஸ்டனுக்கு அருகிலுள்ள Salwick பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு தற்காலிக கட்டுப்பாட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்காஷயர் கவுண்டி கவுன்சிலின் பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு இயக்குனர் மருத்துவர் சக்தி கருணாநிதி கூறியதாவது: "பறவைக் காய்ச்சலால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவு என்பதை குடியிருப்பாளர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் .
இருப்பினும், அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களைப் பாதிக்கும் வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு, நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளை மக்கள் எடுக்காமல் இருப்பது முக்கியம்" என்று கூறினார்.
இந்நிலையில், வெளியே செல்லும் போது இறந்த அன்னப்பறவை, வாத்துக்கள் அல்லது பிற இறந்த காட்டுப் பறவைகளைக் கண்டால், 03459 33 55 77 என்ற டெஃப்ரா ஹெல்ப்லைனுக்குத் தெரிவிக்கவும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், பறவை பராமரிப்பாளர்களிடம் நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுமா என விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான வழக்குகள் ஏதேனும் இருப்பின் அருகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர சுகாதார முகமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு சக்தி கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், "நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாங்கள் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளோம், மேலும் தொற்று அபாயத்தில் உள்ள பறவைகள் மனிதாபிமான முறையில் அழிக்கப்படும்" என இங்கிலாந்தின் தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி கிறிஸ்டின் மிடில்மிஸ் (Christine Middlemiss) கூறினார்.