மூச்சுவிட முடியவில்லை... பொலிசாரிடம் கதறிய கறுப்பினத்தவர் மரணம்
அமெரிக்காவில் கடந்த 2020ல் George Floyd என்ற கறுப்பினத்தவருக்கு ஏற்பட்ட அதே கொடூர நிலை, இன்னொரு கறுப்பினத்தவருக்கு ஏற்பட்டுள்ள பகீர் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கறுப்பினத்தவரின் காணொளி
உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் இறந்த கறுப்பினத்தவரின் காணொளியை ஓஹியோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். 53 வயதான Frank Tyson என்பவரே, பொலிசாரிடம் மூச்சுவிட முடியவில்லை என கதறிய நிலையில் மரணமடைந்தவர்.
ஏப்ரல் 18ம் திகதி சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவயிடத்தில் இருந்து மாயமானவர் என்றே இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுபான விடுதி ஒன்றில் Frank Tyson என்பவரை அடையாளம் கண்ட பொலிசார், அவரை தரையில் தள்ளி, கைவிலங்கிடுகின்றனர்.
36 நிமிடங்கள் கொண்ட அந்த காணொளியில், சாலை விபத்தை அடுத்து பொலிசார் விசாரணையை முன்னெடுப்பது பதிவாகியுள்ளது. அப்பகுதியில் Frank Tyson-ஐ தீவிரமாக தேடியுள்ள பொலிசார், அருகாமையில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அவரை கைது செய்ய முற்படுகையில் பொலிசாருக்கும் அவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள், ஷெரிப்பை அழையுங்கள் என்பது போன்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் குட்னுகட்டாக Frank Tyson-ஐ கீழே தள்ளி அவரை கைவிலங்கிட்டுள்ளனர். அப்போது ஒரு பொலிஸ் அதிகாரி அவரது முதுகில் முழங்காலை வைப்பது போன்று அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
Frank Tyson-ன் கழுத்துக்கு அருகே சுமார் 30 நொடிகள் அந்த பொலிஸ் அதிகாரியின் முழங்கால் இருந்துள்ளது. இந்த நிலையிலேயே, என்னால் மூச்சுவிட முடியவில்லை, காலை எடுங்கள் என Frank Tyson கதறியுள்ளார்.
கொடூர நிலையை நினைவூட்டுவதாக
ஆனால் எதுவும் ஆகாது அமைதியாக இரு என பொலிசார் கூறுகின்றனர். சுமார் 6 நிமிடங்கள் Frank Tyson தரையில் குப்புறப்படுத்திருக்கும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, எந்த சலனமும் இல்லாமல் இருக்கும் ஃபிராங்க் டைசனுக்கு முதலுதவி அளிக்கத் தொடங்கினர். அடுத்த சில நிமிடங்களில் அவசர மருத்துவ உதவிக் குழுவினரும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து அந்த விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட டைசன் ஸ்ட்ரெச்சரில் காத்திருக்கும் ஆம்புலன்ஸில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் டைசன் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மரண காரணம் குறித்தும் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. தற்போது இந்த சம்பவம் 2020ல் George Floyd என்ற கறுப்பினத்தவருக்கு ஏற்பட்ட அதே கொடூர நிலையை நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |